Tuesday, July 27, 2010

மறு பிறப்பு

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் வலை பதிவு எழுதும் எண்ணம் எனக்குள் எழுந்தது. எனக்கு என்னை சுற்றி இருக்கும் மனிதர்களையும் அவர்களின் மன நிலைகளையும் பார்பதில் அளவற்ற இன்பம். நம்மை சுற்றி எத்தனையோ விசித்திரமான வினோதமான மனிதர்கள் இருக்கிறார்கள். யாரையும் சட்டை செய்யாமல் நாம் யாரோ அவர் யாரோ என்று செல்லும் மனப் பாங்கில் எனக்கு உடன்பாடு இல்லை. இன்று நடந்த ஒரு சோகமான நிகழ்ச்சி.

சென்னையில் மழை பெய்வது என்பது ஒரு அதிசயமான நிகழ்வு. கணினி துறையில் இருக்கும் சில நண்பர்கள் மழை பொழியும் போது அதை கண்ணாடி அறைக்குள் இருந்து கவனிப்பதை பார்த்திருக்கிறேன். எனக்கு அதையும் மீறி மழையில் நனைவதில் ஒரு தனி மகிழ்ச்சி. வேலை முடிந்த பிறகு மழை இருந்தால் அது நிற்கும் வரை நான் காத்திருப்பதில்லை. ஒதுங்கி இருக்கும் மக்களை பார்த்து பரிதபப்பட்டுகொண்டு எனது வண்டியில் செல்வதில் ஒரு தனி சுகம். :)

வண்டியில் வந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு டிபன் கடையில் வண்டியை நிறுத்தினேன். அங்கு ஒரு ஹிந்தி காரர் சப்பாத்திகளை விற்று கொண்டிருந்தார். அங்கு சென்று உணவு பரிமாறுபவரின் வருகைக்காக காத்து கொண்டிருந்தேன். அங்கு எனக்கு முன்பே வந்த சிலரும் காத்துக்கொண்டிருந்தனர். முதியவர் ஒருவர் உணவு பரிமாறி கொண்டிருந்தார். காத்திருந்த நம் ஊர் மக்கள் அந்த முதியவரை மிகவும் அவதூறாக பேசினார்கள். அதில் ஒருவர் முன்பு எல்லாம் சேட்டுகள் மிகவும் நேர்மையானவர்களாக இருந்தார்கள் என்றும் தமிழன் இளிச்ச வாயன் என்பதால் இவர்கள் இங்கே பிழைக்க வந்தார்கள் என்று பேசினார். அந்த கும்பலில் இருந்த ஒரு தர்ம சீலர் அந்த முதியவர் பரிமாறுவதற்காக வைத்திருந்த ரொட்டியை அவருக்கு தெரியாமல் விழுங்கினார். விழுங்கியதோடு இல்லாமல் தமிழ் மொழியில் அவரை கேவலமாக பேசி சாப்பிட்டதற்கு பணம் செலுத்தி விட்டு (விழுங்கியதற்கு செலுத்தாமல்)இவ்வளவையும் பார்த்து கொண்டிருந்த என்னை பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிறிது விட்டு அவர் சொன்ன வார்த்தை என்னுள் ஒலித்தது. "தமிழன் இளிச்சவாயன் ,,இந்தி காரபசங்க $%#$^$%*&^%*"
நம்மை காட்டிலும் மோசமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு நம்மை நாடி வரும் மக்களுக்கு நாம் காட்டும் அணுகுமுறையை பார்க்கும் போது ஒரு திருக்குறள் எனக்கு ஒலித்தது

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு

விளக்கம் : வந்த விருந்தினரை வரவேற்று போற்ற தெரியாதவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருத படுவார்கள்.

1 comment:

  1. //வந்த விருந்தினரை வரவேற்று போற்ற தெரியாதவர்கள் எவ்வளவு பணம் படைத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தரித்திரம் பிடித்தவர்களாகவே கருத படுவார்கள்.// தரித்திரம் பிடித்தவர்கள் மட்டுமல்ல கேவலமானவர்கள்.

    ReplyDelete